வியாழன், 8 செப்டம்பர், 2011

படிப்பு

படித்தல்
படிப்பு பல வகைப்படும். ஓர் உயர் உணவு விடுதிக்குச் செல்கிறீர்கள். அங்குள்ள இருக்கையில் அமர்ந்தவுடன் உணவு வகைகளை பரிமாறுகிறவர் (menu card ) ஒன்றை கொடுப்பார். அதை வாங்கியவுடன் கண்களை அதன்மேல் பதித்து நகர்த்துகிறீர்கள். சில உணவு வகைகளை அதில் பார்த்து செல்கிறீர்கள்.
ஒருவரின் தொலைபேசி எண்ணைக் காண அதற்கான புத்தகத்தில் பெயர் தேடி எண் காண்கிறீர்கள்.
ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற அமர்ந்துள்ள நீங்கள் உங்கள் முன்னே வைக்கப்பட்டுள்ள வார பத்திரிக்கை ஒன்றை எடுத்துப் பக்கங்களைப் புரட்டுகிறீர்கள். சிலவற்றை படிக்கிறீர்கள். 300 பக்கங்கள் கொண்ட சிறந்த கதைப் புத்தகம் ஒன்றைப் படிக்கிறீர்கள்.
மேற்கண்ட செயல்களில் நீங்கள் என்ன செய்தீர்கள்?
அச்சிடப்பட்ட வார்த்தைகளை வரிகைளை படித்து அப்போதைக்கு தேவை அல்லது அச்சிடப்பட்ட செய்திகள் அனைத்தையும் ஆழ்ந்து படித்து, புரிந்து நிர்ந்தரமாக நினைவில் வைத்துக் கொள்ள தேவையில்லை. அப்போதைக்கு வரிகளின் மேல் கண்ணோட்டம் சில தேவைகளுக்காக நேரத்தை நகர்த்துவதற்காக, அவை தற்காலிக நினைவாற்றலுக்காக,
கற்றல்
கற்றல் என்பது படிக்கும் போதே கண்களை வார்த்தைகள் மேல் நிலைநிறுத்தி அதைப் புரிந்து வரி வரியாக நிதானமாக தெளிந்து படிப்பது. புரியாமல் படிப்பது கற்றல் அல்ல. உங்களின் அறிவு வகுப்பிற்கு வகுப்பு மேலோங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் நீங்கள் படித்தவை நிரந்தர நினைவாற்றலாக மூளையில் புதைந்துள்ளது. தேவைப்படும்போது சட்டென தேடி எடுத்துக் கொள்ளலாம்.
கற்றலில் விரைவு தேவையில்லை. ஒவ்வொருவரின் நிலைக்கேற்ப கற்கும் நேரம் வேறுபடும். புரிந்து, தெளிந்து படிப்பதே முக்கியம். அனைத்தையும் (கணிதம் உட்பட ) மனப்பாடம் செய்து, படித்து, அப்படியே தேர்வுகள் எழுதி மிக நல்ல மதிப்பெண்கள் கூட பெற்றுவிடலாம். ஆனால் உயர் கல்விக்குச் செல்லச் செல்ல உண்மை வெளிப்பட்டு விடும். சில கேள்விகள் கேட்டாலே நீங்கள் கற்றீர்களா, படித்தீர்களா என்பது எளிதில் தெரிந்து விடும்.
எளிதாக கற்றல்
தற்போதைய கல்வித்திட்டத்தில் பாடங்கள் அலகு வாரியாக (unitwise) எழுதப்பட்டிருக்கும். ஒரு அலகைப் பற்றி விரிவாக உள்ளே படிக்கச் செல்லும் முன் அதன் தலைப்பைப் புரிந்து கொள்ளுங்கள். அந்த அலகில் சொல்லப்பட்டிருப்பவை பற்றி சுருக்கமாக முன்னரோ அல்லது இறுதியிலோ கொடுக்கப்பட்டிருந்தால் அதைப் படிக்கவும். பின்னர் அந்த அலகில் சொல்லப்பட்ட செய்திகளுக்கு சிறு, சிறு தலைப்புகள் தரப்பட்டிருக்கும். அவைகளை படித்துப் பாருங்கள்.
ஒவ்வொரு பத்தியின் (para) ஆரம்பமும் முக்கியச் செய்திகளைக் கொண்டிருக்கும். அவைகளையும் படியுங்கள். படங்கள், பட்டியல்கள், வரைபடங்கள், இவைகளையும் கூர்ந்து கவனியுங்கள்.
வகுப்பில் ஆசிரியர் கூறியது, நண்பர்களுடன் அந்த அலகைப் பற்றி கலந்து பேசியது. நீங்களாக மேலோட்டமாக புத்தகத்தில் அந்த அலகைப்பற்றி உள்ள முக்கியச் செய்திகள் இவைகளை வைத்து ஓரளவு அந்த அலகைப் பற்றி அறிவைப் பெற்றிருப்பீர்கள்.
படிக்கும்போது செய்ய வேண்டியவை
கற்பதற்கு ஒருமித்த சிந்தனையும் மனக்குவிப்பும் அவசியம் தேவை. விசாலமான மனதை, எப்படி ஒரு குவிவில்லை(convex lens) ஒளியை ஒரு புள்ளியில் குவிக்கிறதோ அதுபோல புத்தகத்தின் வார்த்தைகள் மீது குவிக்கும்படி செய்தால்தான் அது சரியாக புரியும். விரைவாக கற்றல் நடைபெறும். நினைவில் நின்று நிலைக்கும். அலை பாயும் மனதுடன் படிக்கும் போது கற்றல் நடைபெறாது.
புத்தகத்தில் உள்ள செய்திகள் தானாக உங்களை நோக்கி வராது. நீங்கள் தான்படித்து, அறிந்து, தெளிந்து பெற்றுக் கொள்ள வேண்டும். கற்றல் பணி சுறுசுறுப்பாக நடைபெற வேண்டும். புத்தக வரிகளில் உள்ள செய்திகளை அறிந்து, புரிந்த பின் உங்கள் நடையில் தனி நோட்டில் எழுதும் போதுதான் உங்களுடையதாக மாறுகிறது. கடினமான வேலைதான். ஆனால் இம்முறையைக் கடைப்பிடித்தால் அப்போதே படித்து, அறிந்து பதித்து வைத்து விட்டீர்கள், தேர்வுகள் இனி தேர்ச்சிகளே என்று உறுதியாகச் சொல்லலாம்.
உங்களுக்கு நீங்களே கேள்வி கேளுங்கள்.
படிக்கும் போது மனதை நம்மிடமே வைத்துக்கொள்ள, முக்கியமான, புரியாத வார்த்தைகளை பென்சிலால் புத்தகத்தில் அடிக்கோடிடுங்கள். இது எப்படி முடியும்? அது எப்படி இயங்கும்? இந்த சமன்பாடு எப்படி வந்தது? என்பது போன்ற கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்டுக் கொள்ளுங்கள். அதற்காக பதிலைப் பெறமுயற்சி செய்யுங்கள்.
அதிகமான கேள்விகள் பிறக்கப் பிறக்க, அந்த அலகைப் பற்றிய அறிவு மேலோங்கியுள்ளது என்பது உறுதி.
குறிப்பு எடுத்தலும், குறிப்பை உருவாக்கலும் (Notes taking and Notes making)
ஆசிரியர் சொல்ல/ எழுத அப்படியே அதை எழுதிக் கொள்வது குறிப்பெடுத்தல் அப்போது மனம் நம்மை விட்டுச் செல்ல வாய்ப்புகள் உள்ளது. குறிப்பை நானே உருவாக்கும்போது மனம் நம்மிடம்தான் இருக்கும். சுறுசுறுப்பாக இயங்கும் அப்போது படித்தலுடன், கற்றலும் இணைந்து நடக்கும்.
“உங்கள் எழுத்துக்களால், புரிந்து தெளிந்த உங்கள் எண்ணங்களால் உருவாக்கப்பட்ட குறிப்புகள் எளிதாய் நிரந்தர நினைவாற்றலாக மாறும்”.
-பெஞ்சமின் பிராங்கிளின்.
அறிவியல், ஆங்கில, தமிழ் அகராதிகளின் அவசியம்
படிக்கும்போது பல சொற்களுக்கு அர்த்தம் புரியாமல் போகலாம். உடனே அதன் அர்த்தத்தை அறிய பயன்படுபவை அகராதிகள். அகராதிகள் நமது சிறந்த நண்பர்கள். நமது படிக்கும் இடத்தில் அவை அவசியம் இருக்கவேண்டும். பொருள் புரிந்து படிக்க அவை பேருதவியாக இருக்கும்.
ஒரு மணி நேரப் படிப்பு – 10 நிமிட இடைவெளி.
மணிக்கணக்காக தொடர்ந்து படிப்பதால் மூளை, கண்கள் சோர்வடைகின்றன. மனம் சலிப்படைகிறது. எனவே 10 நிமிட இடைவெளி தாருங்கள். அந்நேரத்தில் கண்களை உள்ளங்கைகளால் மூடி (palming) நிலையில் ஆழ்ந்த சுவாசத்தை மெதுவாக, மெதுவாக மூக்கின் வழியாக இழுத்து மீண்டும் மெதுவாக மெதுவாக விடவும். 10 முறை செய்யவும். சற்று எழுந்து வெளியே வந்து சுத்தமான காற்றை சுவாசிக்கவும்.

விடாமுயற்சி

எந்த ஒரு வேலையையும் தொடர்ந்து முயல்பவர்களின் விடாமுயற்சி, வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றார் ஒருவர். இதைக் கேட்டதும் சிலருக்கு வியப்பு ஏற்படலாம். முயற்சிகள் தொடரும்போது அதனால் சலிப்பு ஏற்படுவதுதானே நிஜம் என்பது சிலரின் கேள்வியாக இருக்கலாம். ஆனால் சாதிக்கும் வெறி கொண்டவர்களின் கதையே வேறு.
முயற்சியில் தோல்வி ஏற்படும்போதெல்லாம் இன்னும் வேகமாக முயல்கிறார்கள். தங்கள் தீவிரத்தை அதிகப் படுத்துகிறார்கள். அதன்விளைவாக திறக்காத கதவையும் முட்டி மோதித் திறக்கிறார்கள். ஒரு வேலை வாய்ப்பையோ, வணிக வாய்ப்பையோ அந்த முயற்சியின் மூலம் பெறுபவர்கள், அந்தத் தீவிரத்தைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். காலம் முழுவதும் தங்களைக் காக்கப் போவது அந்தத் தீவிரம்தான் என்று தெரிந்து கொள்கிறார்கள்.
முதல் முயற்சியிலேயே கிடைத்த வேலை, முதல் பார்வையிலேயே கனிந்த காதல் போன்றவை சில நேரங்களில் ஆபத்தானவை. காத்திருப்பின் வலி தெரியாமலேயே கனிந்துவிடுகிற வெற்றிகளின் அருமை சிலருக்கு சில சமயங்களில் தெரியாமல் போவதுண்டு.
விடாமுயற்சியைத் தக்கவைத்துக் கொள்கிற மனிதனை, அவனது நிர்வாகமும், சமூகமும் உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. அவனை அதிகம் நம்புகிறது. சாத்தியமற்றவற்றைக் கூட சலிக்காது முட்டி மோதுகிற மனிதன் சாதிக்கப் பிறந்தவன் என்பது, எல்லோரும் அறிந்த ரகசியம்.
நீங்கள் வாழ்வின் எந்த நிலையிலிருந்தாலும் சரி, விடாமுயற்சியைக் கைவிடாதவர் என்ற பெயரை மட்டும் தக்க வைத்துக் கொண்டு அதற்கு உண்மையாய் இருங்கள். நீங்கள் நினைத்தால் கூட உங்கள் வளர்ச்சியைத் தடுக்க முடியாது.
இதற்கு வெளியிலிருந்து ஊக்கங்களோ வழிகாட்டுதல்களோ தேவையில்லை. ஒவ்வொரு விநாடியும் எவ்வளவு விலைமதிப்பு மிக்கது என்று உணரும்போது, நம்மை நிரூபிக்க வேண்டிய காலநெருக்கடி இருப்பது எல்லோருக்குமே புலப்படும்.
சாதாரண மனிதர்களுக்கு பொழுது போகாது, சாதனையாளர்களுக்கோ பொழுது போதாது. இந்த முனைப்பும் காலம் பற்றிய விழிப்புமே காலங்காலமாய் வெற்றியாளர்களை செதுக்கி வருகிறது. தொடர் முயற்சி, வாழ்க்கையில் நமக்கிருக்கும் முக்கியமான துருப்புச்சீட்டு. குறிப்பிட்ட அளவு வயது வந்த பிறகோ அனுபவம் அடைந்த பிறகோ அதனைக் கீழே போட்டு விடலாகாது.
ஏனெனில் காலத்தோடு சேர்ந்து நாமும் பழசாகாமல் காப்பாற்றுவதே அதுதான். எனவே, விடாமுயற்சி செய்யுங்கள்…. விடாமுயற்சியைத் தக்க வைத்துக் கொள்ள!!

கடின உழைப்பு

கடின உழைப்பு என்பது ஒரு நல்ல தொடக்கமும், முடிவுமாகும். கடினமாக ஒருவர் உழைத்தால், அவர் மகிழ்ச்சியாக இருப்பார்; அவ்வாறு அவர் மகிழ்ச்சியாக இருந்தால், அவர் கடினமாக உழைப்பார். சிறந்த கருத்துகளை நாம் செயல்படுத்தாதவரை அவற்றால் பலனில்லை. மனவலிமையும் கடின உழைப்பும் இல்லையென்றால் எப்பேற்பட்ட திறமையும் வீணாகிவிடும்.

உழைப்பின் உதாரணங்கள்:

* ஒரு வாத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீரின் அடியில் ஓயாது காலால் உதைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீரின் மேல் அமைதியாகவும், சீராகவும் காணப்படும்.
* ஒரு பறவையைய் எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கை பறவைகளுக்கு உணவைத் தருகிறதே தவிர அவற்றை அதன் கூடுகளுக்கு கொண்டு செல்வதில்லை. பறவை காலை முதல் மாலை வரை அலைந்தே அதன் இரையைத் தேடுகிறது.
* மில்ட்டன் தனது ‘பாரடைஸ் லாஸ்ட்’ என்ற காவியத்தை எழுதுவதற்காக தினந்தோறும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விடுவாராம்.
* 'வெப்ஸ்டர்ஸ் அகராதியைய்’ தொகுப்பதற்காக நோவா வெப்ஸ்டர் 36 ஆண்டுகள் கடினமாக உழைத்தாராம்.
* ஒரு வயலின் வித்துவான் தனது கச்சேரியை முடித்தவுடன், யாரோ ஒருவர் மேடையருகில் வந்து “உயிரைக் கொடுத்தாவது உங்களைப் போல வாசிக்கும் திறமையைப் பெற வேண்டும்” என்று சொன்னாராம். “நானும் அதைத்தான் செய்தேன்” என்று வித்வான் பதிலளித்தாராம்.